jaga flash news

Monday 10 December 2012

ஜோதிடம்


ஜோதிடம் என்றால் என்ன ? ஜோதிடம் என்பது வானமண்டலத்திலுள்ள நட்சத்திரங்கள் கூறும் செய்திகள் என்று பொருள். அவைகள் வருங்காலத்தைப் பற்றிக் கூறுகின்றன. நமக்குத் தேவையான செய்திகளையெல்லாம் கூறுகின்றன. அவைகள் கூறும் செய்திகளை தெரிந்துகொள்ள நமக்கு நட்சத்திரங்களின் மொழி தெரிய வேண்டும். அந்த நட்சத்திர மொழி தான் ஜோதிடம்.
சரி! நட்சத்திரங்கள் எப்படிக் கூறுகின்றன, அவை 9 கிரகங்கள் மூலமாகக் கூறுகின்றன. அந்த 9 கிரகங்கள்.
1. சூரியன்
2. சந்திரன்
3. செவ்வாய்
4. புதன்
5. குரு
6. சுக்கிரன்
7. சனி
8. ராகு
9. கேது
இந்த 9 கிரகங்களையும் பார்க்கமுடியுமா ? முடியாது. ஏழு கிரகங்களைத்தான் பார்க்க முடியும். ராகு கேதுக்களைப் பார்க்க முடியாது. அவைகள் நிழல் கிரகங்கள் என்று பெயர். முதல் எழு கிரகங்களில் சூரியன், சந்திரன், சுக்கிரன் ஆகியவைகளை நாம் நமது கண்களால் ‘டெலஸ்கோப்’ உதவியுடன்தான் பார்க்க இயலும்.
அடுத்த கேள்வி, இந்த கிரகங்களுக்கும், மனித உயிர்களுக்கும் என்ன தொடர்பு ? தொடர்பு நிறைய இருக்கிறது. சூரிய ஒளி இல்லை என்றால் மனித உயிர்கள், தாவரங்கள் எதுவும் வாழ முடியாது. சூரிய நமஸ்காரம் ஏன் செய்கிறோம் ? சூரிய ஒளி நம் கண்களில் பட்டால் அது நமது கண்களுக்கு நல்லது என்பதால் தானே ! ஆக சூரிய ஒளி மனித வாழ்க்கைக்கு மிகவும் தேவை என்பது விளங்குகின்றது அல்லவா ?
அதே போன்று மனநிலை சரியில்லாதவர்களைப் பாருங்கள்! அமாவாசை, பெர்ணமி காலங்களில் அவர்கள் மனநிலை மிகுந்த பாதிப்புக்குள்ளாவதைப் பார்க்கலாம், அவர்களின் ஆர்ப்பாட்டங்களும் அதிகமாகின்றன. இதே போன்று மற்ற கிரகங்களும் மனித வாழ்க்கையோடு உறவு கொண்டு பல மாற்றங்களைத் தோற்றுவிக்கின்றன.
இப்போது நவகிரகங்கள் என அழைக்கப்படும் 9 கிரகங்களும் மனித வாழ்க்கையோடு தொடர்பு கொண்டுள்ளன எனத் தெரிந்துகொண்டீர்கள் அல்லவா?
சரி ! மொத்தம் எத்தனை நட்சத்திரங்கள்? ஆகாயத்திலே சூரியனைச் சுற்றி பல லட்சக்கணக்கான நட்சத்திரங்கள் உள்ளன். சூரியனை மையமாக வைத்து நீளவட்ட வடிவமான பாதையில் பல லட்சக்கணக்கான் நட்சத்திரங்கள் உள்ளன. இந்த நீளவட்டமான பாதைதான் ராசி மண்டலம் என அழைக்கப்படுகிறது. இந்த நட்சத்திரக்கூட்டங்களை நம் முன்னோர் 27 பாகங்காளகப் பிரித்து உள்ளனர். இந்த 27 பாகங்களுக்கும் பெயர்கள் உண்டு. அந்தப் பெயரால்தான் அந்த நட்சத்திரக்கூட்டம் அழைக்கப்படுகின்றது.
1. அஸ்வினி
2. பரணி
3. கார்த்திகை
4. ரோகினி
5. மிருகசீரிஷம்
6. திருவாதரை
7. புனர்ப்பூசம்
8. பூசம்
9. ஆயில்யம்
10. மகம்
11. பூரம்
12. உத்திரம்
13. ஹஸ்தம்
14. சித்திரை
15. ஸ்வாதி
16. விசாகம்
17. அனுஷம்
18. கேட்டை
19. மூலம்
20. பூராடம்
21. உத்திராடம்
22. திருவோணம்
23. அவிட்டம்
24. சதயம்
25. பூரட்டாதி
26. உத்திரட்டாதி
27. ரேவதி
நாம் என்ன தெரிந்து கொண்டோம் ? ஆகாயமண்டலத்தில் நீள வட்ட வடிவமான பாதையில் 27 நட்சத்திரக் கூட்டங்கள் இருக்கின்றன. நாம் இனிமேல் 27 நட்சத்திரங்கள் இருக்கின்றன எனக் கூறுவோம். இந்த 27 நட்சத்திரங்களின் மேல் இந்த 9 கிரகங்களும் வலம் வருகின்றன. அவைகள் எல்லாம் ஒரே வேகத்தில் வருவதில்லை. ஒவ்வொரு கிரகமும் வேகத்தில் மாறுவிடுகின்றன, சந்திரனுக்கு இந்த ஆகாய மண்டலத்தைச் சுற்றி வர ஒரு மாதம் ஆகிறது. சூரியனுக்கு ஒரு வருடம், செவ்வாய்க்கு ஒன்றரை ஆண்டுகள், ராகு கேதுவிற்கு 18 ஆண்டுகள், சனிக்கு 30 ஆண்டுகள் ஆகின்றன.
இந்த ஒன்பது கிரகங்களில் சந்திரன்தான் மிக வேகமாகச் சுற்றுகிறார். சனி மெதுவாகத்தான் சுற்றுகிறார். அதனால்தான் அவர் பெயர் “மந்தன்” எனக்கூறப்படுவதுண்டு. சனிக்கு ஒருகால் கிடையாது. அவர் நொண்டி ஆகவேதான் அவர் மெதுவாக வலம் வருகிறார். சனி நொண்டியானதற்கு ஒரு கதை உண்டு.
இராவணன் தன்மகன் இந்திரஜித் பிறக்கும் முன்பு அவன் சாகாவரம் பெற வேண்டும் என விருப்பினான். அவன் தான் நவக்கிரங்களையும் வென்று தன் இஷ்டப்படி செயல்பட வைத்தவனாயிற்றே. ஆகவே எல்லா கிரகங்களையும் தன் மகன் பிறக்கும் சமயத்தில் அவன் ஜாதகத்தில் 11ம் வீட்டில் அடைத்து வைத்து விடுகிறான். ஒருவர் ஜாதகத்தில் 11ம் வீடு என்பது வெற்றியைக் குறிக்கும். அதில் எல்லா கிரகங்களும் இருக்குமேயாகில் அவருக்குத் தோல்வியே கிடையாது. இதை மனதில் கொண்டு இராவணன் இந்திரஜித்தின் ஜாதகத்தில் 11ம் வீட்டில் அத்தனை கிரகங்களும் இருக்குமாறு செய்து விட்டான்.
தேவர்கள் இதைக் கண்டு மனம் பதைத்தனர். ஒரு அசுரன் இவ்வாறு பிறந்தால் அவனை மரணமே நெருங்காதே! அப்புறம் உலகத்தில் அநீதிதான் இருக்கும், என்ன செய்வது என்றறியாது கலங்கினர். அப்போது நாரதர் சனிபகவானிடம் சென்று, “உன்னால்தான் ஒருவருக்கு நாசத்தைக் கொடுக்க முடியும், ஆகவே மற்றவர்களை நீதான் காப்பாற்ற வேண்டும் என்று கேட்டும் கொண்டார்.
சனி பகவானும் அவர் வேண்டுகோளுக்குகிணங்கி, இந்திரஜித் பிறக்கும் சமயத்தில் தன் இடது காலை 12ம் வீட்டில் வைத்துவிட்டார். ஒருவர் ஜாதகத்தில் 12ம் வீடு என்பது நாசத்தைக் கொடுக்கு இடமாகும். இந்தக் கட்டத்தில் இடது காலை சனி பகவான் வைத்து விட்டதால், இந்திரஜித் ஜாதகத்தில் சனி பகவான் 12ம் இடத்தில் காணப்பட்டார், மற்ற கிரகங்கள் எல்லம் 11ம் இடத்தில் இருந்தன.
இராவணன் குழந்தை பிறந்ததும் ஜாதகத்தைக் கணித்துப்பார்த்தான், சனி 12ம் இடத்தில் காணப்பட்டார். தன் எண்ணம் நிறைவேறாத காரணத்தால் கடும் சினம் கொண்டான். உடனே 12ம் இடத்தில் காலை வைத்த சனி பகவானின் இடது காலை வெட்டுமாறு கட்டளையிட்டான். இது தான் சனிபகவான் முடமான கதை. ஆகவேதான் அவர் நொண்டி நொண்டி மெதுவாக 30 ஆண்டுகளில் வான் மண்டலத்தை ஒரு முறை சுற்றி வருகிறார்.
இதுவரை நீங்கள் 27 நட்சத்திரங்கள் யாவை, நவக்கிரகங்கள் யாவை, அவை வான் மண்டலத்தை ஒரு முறை சுற்றி வரும் காலம் பற்றி தெரிந்துகொண்டீர்கள்.
நாம் முதலில் ஜாதகத்தை எப்படிக் கணிப்பது என சொல்லிக் கொடுக்க இருக்கிறோம். அதற்குப்பின் எப்படி பலன் சொல்வது என்பது விளக்குவோம். ஜாதகக் கணிதம் செய்ய ஓரளவிற்குக் கணிதம் தெரிய வேண்டும். கணிதம் என்றால் எதோ கல்லூரியிலே பயிலுகிற கணிதமோ என அஞ்ச வேண்டாம். கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் என்ற அடிப்படைக் கணிதம் தெரிந்தால் போதும்.
நாம் முன்பு கூறியது போல் மிகக் குறைந்த கல்வியறிவு உள்ளவர்களுக்கும் புரிய வேண்டும் என்பதைக் குறிக்கோளாகக் கொண்டு மிக எளிய முறையில் எழுதி இருக்கிறோம். அத்தோடு நமது புராணங்களில் வருகின்ற உபகதைகளையும் சேர்த்துக் கொண்டால் புரிந்து கொள்வது மிக எளிதாக இருக்கும்.
நாம் தற்போது காலத்தை எப்படிக் கணக்கிடுகின்றோம் ? இன்று 1/23/2002, நாம் ஜனவரி மாதம் 23ம் நாள், 2002 ஆண்டு எனக் கூறுகின்றோம். இது நமக்கு ஆங்கிலேயர் கற்றுக் கொடுத்த முறை. நமது பண்டைய முறை அப்படி அல்ல. நாம் கணிதம் செய்ய வேண்டியது எல்லாம் நமது பண்டைய முறைபடித்தான். நமது
கலாச்சாரப்படி மொத்தம் 4 யுகங்கள் உண்டு.
1. கிருதயுகம். 2. திரேதாயுகம் 3. துவாபரயுகம் 4. கலியுகம்.
இந்த நான்கு யுகங்களைக் கொண்டது ஒரு சதுர்யுகம். ஒரு சதுர்யுகம் என்பது 43,20,000 ஆண்டுகள் கொண்டதாகும். நாம் இப்பொது 3 யுகங்கள் முடிந்து கலியுகத்தில் இருக்கின்றோம். கலியுகத்தில் தற்போது 5094 ஆண்டுகள் முடிந்துவிட்டன.
ஒரு ஆண்டு என்பது 365 1/4 நாட்கள் கொண்டவை என்பது எல்லோருக்கும் தெரியும். அதாவது சூரியன் இந்த வான மண்டலத்தை ஒருமுறை சுற்றி வரும் காலம் ஆகும். சூரியன் ஒருமுறை வானமண்டலத்தைச் சுற்றிவிட்டால் ஒர் ஆண்டு முடிந்து விடுகிறது. இந்த வருகின்ற ஏப்ரல் 14ம் தேதி தமிழ்ப் புத்தாண்டு பிறக்கிறது எனக் கூறுகின்றோம். அதாவது சூரிய பகவான் வானமண்டலத்தை சுற்றி முடித்து அடுத்த சுற்று அன்று ஆரம்பம் செய்கின்றார். வானவெளி மண்டலத்தின் ஆரம்ப இடம் எது ? இது இருந்தால்தானே அங்கிருந்து ஆரம்பம் செய்ய முடியும். அது தெரிந்து கொள்ள நாம் வானமண்டலத்தின் படத்தைப் போடுவோம். வானமண்டலம் நீள வட்ட வடிவமான பாதையாக் இருக்கிறது என மேலே கூறியுள்ளோம். நாம் நீளவட்டம்மாகப் போடாமல் சதுரமாகவே போடுவோம். அதுதான் எளிது. வானமண்டலத்தைச் சதுரமாகப் போட்டு அதை 12 பகுதிகளாக அதுவும் சம பகுதியாக போடுவோம். அது கீழே காட்டியுள்ளபடி இருக்கும்.
நாம் மேலே வானமண்டலத்தின் படத்தைப் போட்டு 12 பகுதியாகப் போட்டு இருக்கிறோம். இந்த வானமண்டலத்தின் ஆரம்ப இடம் ஒன்று என்று இலக்கம்மிட்ட கட்டம்தான். அதன் ஆரம்பப் பகுதியை 2 கோடுகள் போட்டுக் காட்டியுள்ளோம். இந்த இடத்திலிருந்துதான் சூரியன் சுற்ற ஆரம்பிக்கின்றது. இந்த ஏப்ரல் 14ம் தேதி ஆரம்பித்தால் அடுத்த ஆண்டு ஏப்ரல் 13ம் தேதி முடிய சுற்றும். இந்தம்காலம் தான் ஒராண்டாகும். இந்த ஆண்டுக்கும் பெயர் வைத்து இருக்கிறோம். வருகின்ற ஆண்டின் பெயர் “விஷு” ஆண்டாகும். இது தமிழ் ஆண்டு. இதே போன்று ஒவ்வொரு ஆண்டிற்கும் பெயர் உண்டு. 60 ஆண்டுகள் முடிந்த பின்பு திரும்ப முதலிருந்து ஆரம்பிக்க வேண்டும்.
1. பிரபவ 2. விபவ 3. சுக்கில 4. பிரமோதூத 5. பிரஜோத்பத்தி 6. ஆங்கீரஸ 7. ஸ்ரீமுக 8. பவ 9. யுவ 10. தாது 11. ஈஸ்வர 12. வெகுதான்ய 13. பிரமாதி 14. விக்கிரம 15. விஷு 16. சித்ரபானு 17.சுபாணு 18. தாரண 19. பார்த்திப 20. விய 21. சர்வகித்து 22.சர்வதாரி 23. விரோதி 24. விக்ருதி 25. கர 26. நந்தன 27. விஜய 28. ஜய 29. மன்மத் 30. துர்முகி 31. ஹேவிளம்பி 32. விளம்பி 33. விகாரி 34. சார்வரி 35. பிலவ 36. சுபகிருது 37. சோபகிருது 38. குரோதி 39. விசுவாசு 40. பராபவ 41. பிலவங்க 42. கீலக 43. செமிய 44. சாதரண 45. விரோதிகிருது 46. பரிதாபி 47. பிரமாதீச 48. ஆனந்த 49. ராஷஸ 50. நள 51. பிங்கள 52. காளயுக்தி 53. சித்தாத்திரி 54. ரெத்திரி. 55. துன்பதி 56. துந்துபி 57. ருத்ரோகாரி 58. ரக்தாஷி 59. குரோதன 60. அக்ஷய
இப்பொது தமிழ் ஆண்டு என்றால் என்ன என்று தெரிந்துகொண்டீர்கள். சூரியன் வானமண்டலத்தைச் சுற்ற எடுத்துக் கொள்ளும் காலமே ஒர் ஆண்டாகும். வானமண்டலத்தின் ஆரம்ப இடம் எது எனவும் தெரிந்து கோண்டீர்கள்.

No comments:

Post a Comment