jaga flash news

Sunday 16 December 2012

காமத்தை வெல்வது எப்படி ? HOW TO OVERWHELM THE LUST ?


 காமத்தை வெல்வது எப்படி ? HOW TO OVERWHELM THE LUST ?



"காமம் பாசத்துடன் வளர்த்த நாய் குட்டி போல "

ஒரு சிஷ்யன் பரமஹம்ஸரிடம் வந்து காமத்தை எப்படி ஜெயிப்பது என்று கேட்டான். தான ஜபதபங்கள் செய்து வந்த போதிலும் தன் மனத்தில் அடிக்கடி கெட்ட நினைவுகள் உண்டாவதாகத் தெரிவித்தான். அதற்குப் பகவான், பதில் சொன்னதாவது : - "ஒரு மனிதன் ஒரு நாயை வெகு பிரியமாக வளர்த்து வந்தான். அவன் அதனோடு கொஞ்சுவான், விளையாடுவான், அதைக் கைகளில் தூக்கிக் கொண்டு போவான், அதை முத்தமிடுவான். இந்த முட்டாள்தனத்தை கவனித்த ஓர் அறிஞர், நாய்க்கு அப்படி இடங்கொடுக்கக் கூடாதென்றும், அது பகுத்தறிவற்ற பிராணியாதலால் என்றைக்காவது ஒரு நாள் அவனைக் கடித்துவிடுமென்றும் கூறிவிட்டுச் சென்றனர். நாயின் எஜமானன் இதைக் கேட்டு அதன்படி நடக்க எண்ணித் தன் மடிமீதிருந்த அந்நாயைத் தூர எறிந்துவிட்டு, அதனோடு இனிமேல் ஒருபோதும் கொஞ்சிக் குலாவுவதில்லை என்று தீர்மானம் பண்ணினான். தன் எஜமானனுடைய மனமாற்றத்தை நாய் அறியவில்லையாதலால் அது அடிக்கடி அவனிடம் ஓடி வந்து குலாவத் தலைப்பட்டது. நன்றாய்ப் பல தடவை அடிபட்ட பிறகுதான் அது தன் எஜமானனைத் தொந்தரவு செய்வதை விட்டது. உனது நிலைமையும் அப்படிப்பட்டதே. உன் மனத்தில் இதுவரையில் வைத்துப் போற்றி வந்த நாயை நீ விலக்க நினைத்தாலும் அது உன்னை எளிதில் விடாது. இருந்தாலும் பாதகமில்லை. அந்த நாயோடு இனிமேல் கொஞ்சிக் குலாவாது, உன்னிடம் அது குலாவ வரும்போதெல்லாம் அதை நன்றாய் அடி. காலக்கிராமத்தில் அதனுடைய தொந்தரவுகள் உனக்கு முற்றிலும் இல்லாமலே அகன்றொழியும். 
பின் குறிப்பு :

பெண்ணாசையை மனிதர்கள் விட்டொழிக்க வேண்டுமென்று பகவான் ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர் உபதேசிப்பதிலிருந்து, பெண்களெல்லாம் கொடியவர்களென்றாவது, அவர்களின்மேல் வெறுப்புக் கொள்ள வேண்டுமென்றாவது சொல்வதாகக் கொள்ளுதல் கூடாது. அவர் தமது வாழ்க்கையிலும், உபதேச மொழிகளிலும் பெண் மக்களை சக்தி-ஜகன்மாதாவின் அவதார ரூபங்களாகவே கருதியுள்ளார். ஆண், பெண் இருபாலரும் சிற்றின்ப விஷயங்களில் அகப்பட்டு பகவானை மறக்கக் கூடாதென்பதை வற்புறுத்தவே, ஆத்மலாபமடைய விரும்புபவன் பெண்ணாசையையொழித்தல் வேண்டுமெனக் கூறினார். ஆண் மக்களைப் போன்று பெண் மக்களுக்கும், இவ்வுபதேசம் இன்றியமையாததெனக் கொள்ளல் வேண்டும்.

No comments:

Post a Comment